வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (16.05.2021)  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தும் பணியில் 2000 போலீசார் 65 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
      காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  இன்று (16.05.2021) தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பு மற்றும் வி.வி.டி சிக்னல் சந்திப்பு ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுரக்குடிநீர் வழங்கினார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  அமலில் இருந்து வருகிறது.   அதன்படி இன்று (16.05.2021) முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் நேற்றிலிருந்து (15.05.2021) மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு எந்த கடைகளும் திறப்பதற்கு அனுமதி இல்லை. பால் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் வழக்கம்போல் இயங்கும்.  ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்,  தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூபாய். 2,000/- பணத்தை வாங்க செல்வோர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி நகரில் 20 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் 600 பேர் மீது வழக்கு போடப்பட்டு பணம் ரூபாய் 86,00,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.