ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய இணை ஆணையாளர் ( வடக்கு ) துரைகுமார் IPS., ...
ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார் 02.07.2021 அன்று மாலை சுமார் 5.15 மணியளவில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தனது ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த போது ஆவடி விமான படைபயிற்சி மையத்தில் ஏர்மேன் பயிற்சி முடித்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிகில்ஜா மற்றும் அவரது நண்பரும் மேற்படி ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமாரின் ஆட்டோவில் ஏறி பயணித்து சென்னை மெரினா கடற்கரையில் இறங்கியுள்ளனர். இறங்கும் போது நிகில்ஜா மற்றும் அவரது நண்பர் இருவரும் மறதியாக தங்களது பைகளை ஆட்டோவில் தவறவிட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் பைகளை தவறவிட்டதை உணர்ந்த நிகில்ஜா அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார் 02.07.2021 அன்று இரவு8.30 மணியளவில் சவாரி முடித்து வீட்டிற்கு சென்று இறங்கி தனது ஆட்டோவை பார்த்த போது பயணிகள் தவறவிட்ட 2 பைகள் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே ஆட்டோ ஓட்டுநர் மேற்படி 2 பைகளையும் நேர்மையாக தனது வீட்டின் அருகில் உள்ள ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி தலைமையிலான காவல் குழுவினர் இரண்டு பைகளையும் சோதனை செய்தபோது அதில் பணம் ரூ.4000 ஒரு செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் பையில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆட்டோவில் தவறவிட்ட பைகளை ஆட்டோ ஓட்டுநர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது குறித்து உரிமையாளர் நிகில்ஜாவிடம் கூறியுள்ளனர். நிகில்ஜா மற்றும் அவரது நண்பர் இருவரும் ஏழுகிணறு காவல் நிலையம் சென்று தவறவிட்ட இரண்டு பைகளையும் போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
பயணிகள் தவறவிட்ட பைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமாரை இணை ஆணையாளர் (வடக்கு) துரைகுமார், இ.கா.ப., இன்று (04.07.2021) நேரில் வரவழைத்து வினோத்குமாருக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார்.


Comments (0)
Facebook Comments (0)