பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி பரிசளித்த முக்கூடல் காவல்துறையினர்...
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி வாட்டர் டேங்க் தெரு, பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் மாரியம்மாள் (19), என்பவர் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இன்று சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது கீழே கிடந்து மணிபர்ஸை எடுத்துள்ளார்.

அதனை திறந்து பார்த்தபோது அதில் 58,210 ரூபாய் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும், ஆதார் கார்டு இருப்பதை கண்டு முக்கூடல் காவல் நிலையத்தில் நேரில் சென்று ஒப்படைத்துள்ளார். பின் முக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன் விசாரித்தபோது மணிபர்ஸின் உரிமையாளர் சேரன்மகாதேவி காயிதேமில்லத் தெருவை சேர்ந்த ஜாஸ்மின் நிஷா (35) என்பது தெரியவாந்தது. உரியவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையம் வந்து பணம் மற்றும் செல்போனை அவர் பெற்றுக் கொண்டார். சிறுவயதில் இத்தகைய நேர்மை குணத்தைப் பாராட்டி திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் துறையினர் மாரியம்மாளை பாராட்டி குத்து விளக்கை பரிசாக அளித்தனர். மாரியம்மாள் இச்செயலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனும் வெகுவாக பாராட்டினார்.


Comments (0)
Facebook Comments (0)